வவுனியாவைச் சேர்ந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் புலனாய்வுப் பிரிவினால் கைது : பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

336

Nirojan

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவனான யோகநாதன் நிரோஜன், பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (25) என்ற மாணவனும் மற்றுமொரு தமிழ் மாணவனும் கடந்த 5ம் திகதி முற்பகல் 11 மணியளவில் கடத்தப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதன் பின்னர் குறித்த இரு மாணவர்களும் பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் நேற்று வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் மாணவனின் தந்தையான எஸ்.யோகநாதன் தெரிவிக்கையில், எனது மூத்த மகன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் துறையில் 3ஆம் வருட மாணவனாக கற்று வருகின்றார்.

தனக்கு விடுமுறை எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்னடம்பனில் உள்ள எமது வீட்டில் நின்றுவிட்டு, பரீட்சை இருப்பதாகத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகம் சென்றிருந்தார்.
அங்கு பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பொழுது கடந்த 05.08.2014 அன்று எனது மகனை சிலர் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தகவலறிய நேற்று முன்தினம் கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் சென்றோம். அவர்கள் தமக்கு தகவல் கிடைத்துள்ளது, எனது மகனை பலாங்கொட பொலிஸார் கைது செய்து கொழும்பில் தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தனர். இதனையடுத்து வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.