மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி விரதத்தின் சிறப்புக்கள்!!

464

varalakshmi

திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலக்ஷ்மி விரதத்தை மேற்கொள்வார்கள். ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இதை அனுஷ்டிக்க வேண்டும்.

திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காக கடைந்தபோது பல பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன.
அவற்றோடு சேர்ந்து ஒரு மாலை நேரத்தில் மகாலக்ஷ்மியும் தோன்றினாள். அவள் தோன்றிய தினம் இது என்று புராண தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாருமதி என்ற பெண்ணின் கனவில் தோன்றிய மகாலக்ஷ்மி, வரலக்ஷ்மி விரதம் பற்றியும், அதனை கடைபிடிப்பது பற்றியும், அவ்வாறு கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

கனவு கலைந்து எழுந்த சாருமதி, மகாலக்ஷ்மியின் உத்தரவின்படியே, ஒவ்வொருஆண்டும் வரலக்ஷ்மி நோன்பை கடைபிடித்து வந்தாள். மேலும் வரலக்ஷ்மி விரதத்தின் சிறப்பு பற்றி, பலருக்கும் எடுத்துரைத்து அவர்களையும் வரலக்ஷ்மி நோன்பு இருக்கும்படி செய்ததாகவும் கூறப்படுகிறது.

விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தமாக கழுவி, மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும். வீட்டின் பூஜை அறைக்குள், சுத்தப்படுத்தப்பட்ட பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போடவேண்டும்.

கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பப்பட்ட தட்டை வைக்கவேண்டும். அந்த தட்டின் மீது நிறைகுடத்தை வைத்து, குடத்திற்கு பட்டுப்பாவாடை கட்டி, நகைகள் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும். இப்படியாக அமைக்கப்பட்ட கும்பத்திற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூச்சூட்டி, அந்த கும்பத்திற்கு முன்பாக தேங்காய், பழம், கற்கண்டு, உணவுப்பதார்த்தங்கள்,மலர்கள் வைக்க வேண்டும்.

இவற்றுடன் மகாலக்ஷ்மியின் படத்தை வைப்பது மிகவும் சிறப்பானதாகும். அதைத் தொடர்ந்து நோன்பு கயிற்றைக்கும் பத்தோடுவைத்து,’என் வீட்டுக்கு வந்திருக்கும் வரலக்ஷ்மி தாயே!எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே’ என்றுகூறி வேண்டியபடி நெய்விளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.

மேலும் வரலக்ஷ்மி தோத்திரங்களை கூறியபடி, தூப தீப ஆராதனைகளைச் செய்து வரலக்ஷ்மி தாயை வழிபாடு செய்ய வேண்டும். பூஜைகள் நிறைவடைந்தவுடன்,நோன்பு கயிற்றை எடுத்து கன்னிப் பெண்களின் கைகளில், சுமங்கலிப் பெண்கள் கட்டிவிட வேண்டும்.சுமங்கலிப் பெண்களின் கழுத்தில் சுமங்கலிப் பெண்களே நோன்பு கயிற்றைக் கட்டவேண்டும்.

தொடர்ந்து வரலக்ஷ்மி நோன்பு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்களான மலர்ச்சரம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொடுத்து,அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும். வரலக்ஷ்மி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கவேண்டும்.

வரலக்ஷ்மி நோன்புவிரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர்களுக்கும் சிறப்பு வந்து சேரும். இந்தவிரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.