நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம் : தமிழர் பகுதியில் சோக சம்பவம்!!

276

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட இறக்காமம் பொலிஸ் பிரிவில் உள்ள நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த மீனவர் காணாமல் போயிருந்த நிலையில், தனது கணவரை காணவில்லை என அவரது மனைவி நேற்று காலை இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.