குருணாகல், நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக பொறியியல் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதான கவிந்த ருக்ஷான் விஜேபண்டார என்ற இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் உயிரிழந்த இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 18 வயதான சதீப சதுரங்க என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் நிக்கவெரட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கள புத்தாண்டுக்காக ரஸ்நாயக்கபுர பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இரண்டு உறவினர்களும் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
மாணவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட அதிகாரி, முதுகுத் தண்டு, விலா எலும்புகள், முதுகெலும்பு மற்றும் உள் உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பால் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.