ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வெலிகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவன் இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த 29 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு வந்த மாணவர்கள் சிலர் தலைக்கவசங்களினால் எனது தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலமாக தாக்கினர்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இதனால்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் என்னை இவ்வாறு தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் எனக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.