வவுனியா, ஓமந்தை, கோழியகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நித்திரையில் இருந்த 3 வயதுச் சிறுவனைப் பாம்பு தீண்டியதில் அவர் மரணமடைந்தார் என வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோழியகுளம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரநாதன் தபிசன் (3) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவின் மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை, கோழியகுளம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் குறித்த சிறுவன் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த பாம்பு அவரைத் தீண்டியுள்ளது.
இதனையடுத்து அந்தச் சிறுவன் அழுதவாறு கையில் ஏதோ கடித்து விட்டதாக தனது தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் கொண்டுசெல்லப்பட்டார்.
சிறுவனின் கையின் பல இடங்களில் பாம்பு தீண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று அதிகாலை மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது