இலங்கையில் 25 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் மரணம் : ஒன்றாக அடக்கம்!!

564

கம்பஹா, பஸ்யால பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்து ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்யால பகுதியைச் சேர்ந்த 58 வயதான நாமல் குமார மற்றும் அவரது மனைவி 60 வயதான துலானி சமரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதயத்தில் ஓட்டையுடன் பிறந்த துலானி, வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடனேயே வாழ்ந்துள்ளார்.



துலானிக்கு இதய நோய் இருப்பதை அறிந்திருந்தும் அவரைக் காதலித்த நாமல், அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமான துணையாக இருந்துள்ளார்.

துலானியும் நாமலும் இரு வீட்டாரினின் விருப்பத்துடன் காதல் திருமணம் செய்தனர். திருமணமானதிலிருந்து, இருவரும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாமல் தனது குடும்பத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு பிரம்பு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். துலானியிடமிருந்து நிறைய ஆதரவைப் பெற்றார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் துலானி திடீரென நோய்வாய்ப்பட்டு, வரக்காபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு வாரத்தில் அவர் உயிரிழந்து விடுவார் என அறிவித்துள்ளனர்.

தனது மனைவியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்த நாமல், மிகவும் வேதனையுடன் காணப்பட்டுள்ளார்.

துலானி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, ​​நாமலுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மருத்துவர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சையை அளித்த போதிலும், மாரடைப்பால் நாமல் உயிரிழந்துள்ளார்.

மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்த நாமலின் மனைவி, தனது துயரத்தை அடக்கிக்கொண்டு, நாமலின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைத்து நண்பர்களையும் கவனித்துள்ளார்.

இதன் போதே, நாமலின் மனைவி மீண்டும் நோய்வாய்ப்பட்டார். அவர் வரகாபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தம்பதியினரின் உடல்களை ஒரே கட்டிடத்தில் ஒன்றாக வைத்து ஒரே நாளில் அடக்கம் செய்துள்ளனர்.