வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் பலி, மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்!!

1481

யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். காரில் காயமடைந்த மூன்று பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர். தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் வயது 52 என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி (வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.