வவுனியாவில் கடந்த சில வாரங்களாக முன்னறிவித்தலின்றி நிறுத்தப்படும் மின்சார விநியோகத்தால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மின்சாரத்தை நிறுத்துவதாகவிருந்தால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்யக்கூடியதாக இருக்குமெனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டமையினால் வர்த்தகர்கள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுத்தனர்.
அத்துடன் திடீரென மின்சாரம் அதிகரித்து வருவதால் வீடு மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள இலத்திரனியல் சாதனங்களும் பழுதடைவதாக மக்கள் தெரிவித்தனர்.
தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின் பட்டியலை வழங்கி சில நாட்களிலேயே முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்துச் செல்வதாகவும் மேலும் பிந்திய கட்டணம் என பட்டியலுக்கு மேலதிக கட்டணம் அறவிடும் மின்சாரசபையினர் தடங்களற்ற மின்சாரத்தினை வழங்க வேண்டிய முக்கிய பொருப்பினையும் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் இன்றும் பல்வேறு பகுதிகளில் பலதடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.