வவுனியாவில் பேருந்துகளை மறித்து திடீர் சோதனை : 13 சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம்!!

1531

கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஆர்.எம்.என்.கே.ராஜகுரு தலைமையில் வவுனியா பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட பிரிவு போக்குவரத்து பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாடானது வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அரச மற்றும் தனியார் பேரூந்துகள், அதிவேக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் மேலதிக பாகங்கள் பொருத்தியமை, வழுக்கையான ரயர்கள், லைட் மற்றும் வைசர் வேலை செய்யாமை, அதிக ஒலி எழுப்பும் கோன், விபத்தினை ஏற்படுத்தும் வகையிலான பாகங்கள் பொருத்தியமை, வர்ணம் மாற்றிய மோட்டார் சைக்கிள்,

வாகன இலக்கத்தகடு தெரியாத வண்ணம் இருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக ஒர் முச்சக்கரவண்டி சாரதி, ஒர் மோட்டார் சைக்கில் சாரதி, 11 பேரூந்து சாரதிகள் என 13 வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் வாகன சாரதிகள் மேலதிக பாகங்கள் பொருத்துவதை தவிர்ப்பதுடன் வாகனங்களில் டயர் மற்றும் லைட் , பிரேக் போன்றவற்றில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.