வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்திய துணை தூதரக உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பேருந்து சாரதி செய்த செயல் தற்போது பலரது பாராட்டை பெற்று வருகின்றது. இந்திய துனைதூதரக உத்தியோகஸ்தர் தனது குடும்பத்தினருடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகையில் வவுனியாவில் விபத்தில் ஏற்பட்டது.
அவர்கள் விபத்தில் சிக்கியபோது வீதியால் பயணித்த இளைஞன் ஒருவர் காயப்பட்டவர்களை உடனடியாக வீதியால் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தி அதன்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது காயமடைந்தவர்களின் உடைமையில் இருந்த ஒரு தொகை பணம், மற்றும் பெண்ணின் தாலி உள்ளிட்ட நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை இளைஞன் பாதுகாப்பாக பத்திரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் அந்த இளைஞன் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் ஒருவரை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை கூறியிருந்தார்,
இதனையடுத்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் , யாழ் இந்திய துணைத் தூதுவரை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை கூறி அந்த இளைஞரையும் அவருடன் தொடர்புபடுத்தியிருந்திருந்தார்.
இதனையடுத்து நேற்றைய தினமே யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு சென்று பணம், மற்றும் நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை ஒப்படைத்திருந்தார்.
இந்த மனிதாபிமான செயலை செய்தவர் வவுனியா புளியங்குளத்தை பூர்வீகமாகவும் தற்பொழுது சிதம்பரபுரத்தில் வசித்து வரும் 34 வயதுடைய செல்வராசா நிரோசிகன் என்பவராகும் இவர் ஒரு பேருந்து சாரதி என்றும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் குறித்த இளைஞன் கூறுகையில், அதாவது வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக உதவிகளை செய்து குறித்த உயிர்களை காப்பாற்ற முன்வாருங்கள் என்றும் அப்படியான சந்தரப்பங்களில் வேறு எந்த நோக்கமும் இல்லாது பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.