பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உரையாற்றிய இந்திய வம்சாவளி மாணவிகபட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள MIT என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (MIT) பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா வெமுரி என்ற மாணவி, காசா போரைக் கண்டித்தும் இஸ்ரேலை விமர்சித்தும் உரையாற்றியிருந்தார்.
இதன் காரணமாக, அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
MITயின் 2025ஆம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி, கடந்த வியாழக்கிழமை (மே 29) நடைபெற்ற ஒன்எம்ஐடி – OneMIT தொடக்க விழாவில் உரையாற்றினார்.
அதன்போது, அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலைக் கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடிய தனது சக மாணவர்களைப் பாராட்டியதுடன், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளையும் விமர்சித்தார்.
அவரது உரைக்குப் பிறகு, மேகா வெமுரி மீது MIT ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவும் அவருக்கு தடை விதித்து MIT பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், “எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது.
ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.