பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட விண்கல் : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

209

‘2024 YR4’ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

எனவே அச்சப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும். நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது.

இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும். நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும்.

உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது. கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம்.

நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.