விமான விபத்தில் பலியான தாதி : கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்!!

606

புது வீடு, அரசு வேலை என இரண்டும் தயாராக இருந்த நேரத்தில் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கேரள செவிலியர் ரஞ்சிதா உயிரிழந்திருப்பது அம்மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பத்தனம்திட்டாவின் திருவல்லா புல்லாட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (38). இவருக்கு திருமணமாகி 10 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சில ஆண்டுகள் ஓமன் நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதாவுக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலை கிடைத்தது.

கேரளாவில் சொந்த வீடு கட்டி வாழ வேண்டும் என்ற கனவோடு கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்று வேலையில் சேர்ந்தார். தற்போது ஊரில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருவதால் அதனை கவனிக்க விடுமுறை எடுத்து கேரளாவுக்கு திரும்பினார்.

இந்த சூழலில், ரஞ்சிதாவுக்கு கேரளா சுகாதார துறையில் செவிலியர் வேலையும் கிடைத்தது. அரசு வேலையில் சேர தயாரான ரஞ்சிதா இங்கிலாந்துக்கு சென்று வேலை ஒப்பந்தத்தை முறைப்படி முடித்து கேரளா திரும்ப இருந்தார்.

இதற்கான லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.

இது தவிர விமானம் விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரி கட்டடத்தில் இருந்த 50 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பயணிகளில் ரஞ்சிதாவும் ஒருவர். விமான விபத்துக்கு பிறகு ரஞ்சிதாவின் மரணம் உறுதி செய்யப்பட்டு அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தாய் இன்று லண்டனுக்கு சென்று திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நம்பி பள்ளிக்குச் சென்றிருந்த இரு பிள்ளைகளையும் உறவினர்கள் சென்று வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் ரஞ்சிதாவின் மரணத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

அதை கேட்ட குழந்தைகள் கதறி அழுதனர். இதனால், செவிலியரின் இல்லம் அமைந்திருந்த திருவல்லா புல்லாட் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

வீட்டு வேலை முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் லண்டன் சென்று திரும்பியதும் மீதி வேலைகளை விரைவாக முடித்திட எண்ணியிருந்த ரஞ்சிதாவை மரணம் இழுத்து சென்றுவிட்டது.

சொந்த வீடு கனவு இன்னும் சில நாட்களில் நிறைவேற இருந்த நிலையில் அந்த புது வீட்டுக்கு ரஞ்சிதாவின் உடல் மட்டுமே வந்து சேர போகிறது.