வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன், பதில் முதல்வராக கார்த்தீபன் : கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்!!

757

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பதில் முதல்வர் தெரிவுகள் இன்றயதினம் இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11 ஆசனங்கள் தேவை. அந்தவகையில் சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்கட்சிகளினால் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட நான்கு ஆசனங்களும், தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட மூன்று ஆசனங்கள்,ஜக்கியமக்கள் சக்தியின் இரண்டு ஆசனங்கள், ஜனநாயக தேசிய கூட்டணியின் ஒரு ஆசனம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒரு ஆசனம் என 11ஆசனங்கள் கைவசம் உள்ளது.

எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும்,ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக பெயரிடப்படவுள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கூட்டுக்கு ஆட்சி அமைக்கத்தேவையான 11ஆசனங்கள் உறுதியாகியுள்ள நிலையில் இன்று எதிர்பார்க்கப்பட்ட படி இந்தக்கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகின்றது.