
அவுஸ்திரேலிய மருத்துவமனை ஒன்று கவனக்குறைவால் 200 நோயாளிகளை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என அறிவித்துவிட்டது.
சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளில் கவனக்குறைவாக இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டு விட்டதாக அம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பின்னர், தங்களது தவறு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அனைத்து நோயாளிகளிடமும் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஆனபோதும் ஆரோக்கியம் பெற்று வீடு திரும்பிய நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளில் இறந்து விட்டதாக எழுதப்பட்டிருந்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அதிகப்படியான பணிச் சுமையே இத்தகைய தவறிற்குக் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.





