நுவரெலியா, கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (26) மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த மாணவன் புறப்பாட நடவடிக்கைகளுக்காக இரண்டு மாத காலங்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்துள்ள நிலையில் கடந்த 23 ஆம் திகதி மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அதே பாடசாலையில் கடமையாற்றும் பாட ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவனிடம் பாடக் குறிப்புப் புத்தகத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
இதன்போது இந்த மாணவன் தான் இரண்டு மாத காலங்களாக புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அதன் பாடக் குறிப்புப் புத்தகத்தை ஆசிரியரிடம் காண்பித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர், புத்தகத்தை தூக்கி எறிந்து மாணவனை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளித்துள்ளார்.
இந்நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் நேற்று வியாழக்கிழமை (26) மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.