வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுகளின் போது ஜனநாயகம் மீறப்படுவதாக குற்றம்சாட்டி தேசியமக்கள் சக்தி உறுப்பினர்கள் பிரதேசசபையின் முதல் அமர்வில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று (27.06.2025)நடைபெற்றது.
இதன்போது சபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சி சார்பில் பா.பாலேந்திரனின் பெயர் பிரேரிக்கப்பட்ட நிலையில் தேசியமக்கள் சக்தி சார்பில் ராஜலிங்கம் கார்த்தீபனின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என அவரால் கோரப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் கார்த்தீபன் தெரிவுகளை ரகசியமாக மாத்திரம் நடாத்துமாறு கோரிக்கை முன்வைத்தார்.
ஏனெனில் இது கட்சித்தலைவர்களால் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உறுப்பினர்கள் நடக்கவுள்ளனர். இதனால் மக்களின் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே ரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலமே உறுப்பினர்களின் உண்மை நிலை வெளிப்படும்.
கொழும்பில் ஒரு நடைமுறை இங்கு ஒரு நடைமுறையா. என கேள்வி எழுப்பியதுடன் ஆணையாளர் நடுநிலையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டினார். அவரது கருத்துக்கு ஆதரவாக அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
இதன்போது சட்டம் இவ்வாறே சொல்கின்றது. அதன்படியே தெரிவுகளை என்னால் நடாத்தமுடியும். அதில் உங்களுக்கு எதேனும் பிரச்சனை இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். எனவே இந்த நிகழ்வை குழப்ப வேண்டாம். தெரிவுகளை நடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளரால் பதில் வழங்கப்பட்டது.
இதனை ஏற்க்க மறுத்த தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவுகளை புறக்கணித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தேசியமக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களுடன், இலங்கை தொழிலாளர் கட்சியின் 2 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் இதன்போது வெளிநடப்புசெய்தனர்.
எனினும் சபையில் போதிய கோரம் இருந்த நிலையில் தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.