30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறை!!

1028

மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தின் முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையத்தை இடையூறு இன்றி நடாத்திச் செல்ல வேண்டுமானால் இலஞ்சம் வழங்குமாறு பொலிஸ் அதிகாரி கோரியுள்ளார். இதன் அடிப்படையில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரான பெண், பொலிஸ் உத்தியோகத்தருக்கு 30000 இலஞ்சம் வழங்கியுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு 14 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன் லஞ்சமாக பெற்றுக்கொண்ட 30000 ரூபாய் குறித்த பெண்ணுக்கு திருப்பி செலுத்த வேண்டும் எனவும் அபராதமாக 30000 ரூபா செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 8ம் திகதி ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறின்றி நடத்திச் செல்வதற்காக நிலையத்தின் உரிமையாளரிடம் பொலிஸ் உயர் அதிகாரி, 40000 ரூபா லஞ்சமாக கோரியுள்ளார்.

எனினும் அந்த தொகையை குறைத்து குறித்த பெண், பொலிஸ் அதிகாரிக்கு 30000 லஞ்சமாக வழங்கியுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட வழக்கு விசாரணை பின்னர் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.