மாயமான பல்கலைக்கழக மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு!!

598

டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத்தைப் பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி யமுனை ஆற்றில் சினேகா தேப்நாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.

டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7ம் தேதி மாயமானார். இதையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையின் போது, “சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது.

நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.