வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதி : கொழும்பில் பெண் உட்பட பலரை ஏமாற்றிய கும்பல்!!

504

சமூக ஊடகங்கள் மூலம் பெண்ணொருவரிடமிருந்து 4.7 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

சந்தேக நபர் மருதானையில் வசிக்கும் 43 வயதுடையவர் என்று குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதியை பெற்றதாக கூறி, சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு நபர்களை இணைத்து மோசடி செய்யும் வலையமைப்பில் ஈடுபட்ட ஒரு பெண்ணையும் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது.

59 வயதான அந்தப் பெண், கிராண்ட்பாஸ், ஹேனமுல்ல பகுதியை சேர்ந்தவராகும். மோசடி செய்யப்பட்ட பணம் அவருக்கு சொந்தமான கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.

இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் அவர் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

முன்கூட்டியே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்து, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவரது விசாரணையின் போது பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்றும், அதன்படி, மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.