ஐக்கிய அரபு இராட்சியத்தில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட பெண்!!

501

ஐக்கிய அரபு இராட்சியத்தில், கேரள பெண் ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேரளாவின், கொல்லம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண், திருமணத்திற்குப் பின்பு கணவருடன் ஐக்கிய அரபு இராட்சியத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு, குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். அந்தப் முறைப்பாட்டில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவர் துன்புறுத்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 43 பவுண் தங்க நகைகளை நாங்கள் வரதட்சணையாகக் கொடுத்த போதிலும், கூடுதலாக வரதட்சணை கேட்டு என் மகளை அவரது கணவர் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். என் மகளின் குரல்வளையை நெரித்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

அத்துடன், சாப்பிடும் தட்டால் தலையைத் தாக்கியதிலேயே எனது மகள் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் கொடுத்த முறைப்பாட்டின் பேரில், கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.