
நோயாளின் கண்ணின் கீழே முளைத்திருந்த பல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின், சிவான் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர், பல மாதங்களாக முக வீக்கம் மற்றும் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பாதிப்பு மோசமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கண்ணுக்கு கீழே உள்ள எலும்பில் பல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த பல்லின் வேர், கண்ணின் குழியை நெருங்குவதை பார்த்த அவர்கள், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவெடுத்தனர்.

பல் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் நிம்மி சிங்கின் மேற்பார்வையில், சிறப்பு அறுவை சிகிச்சை குழு இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
பல்லின் வேர் உள்ள சரியான நிலை மற்றும் ஆழத்தை கண்டறிய மேம்பட்ட CBCT ஸ்கேன் செய்யப்பட்டது.
பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், கண்ணுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், பல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அவரின் முக வீக்கமும் குறைந்தது.
பொதுவாக பற்கள் வாயின் உள்ளே வளரும், இவருக்கு கண்ணின் கீழே வளர்ந்துள்ளது இது அரிதான ஒன்று என மருத்துவர் நிம்மி தெரிவித்துள்ளார்.





