இளம்பெண்ணை அசிட் குடிக்க வைத்து கொன்ற கணவன் குடும்பத்தினர்!!

685

நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணைத் தொடர்பான உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக உத்தரபிரதேச மாநிலத்தில்,

இளம்பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கணவன் குடும்பத்தினர் கொலைச் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியைச் சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. குல் பைசா தனது கணவர் பர்வேஷ் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

திருமணத்திற்குப்பின் கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் குல் பைசாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி கூடுதல் வரதட்சணை கேட்டு குல் பைசாவை பர்வேசும் அவரது குடும்பத்தினரும் தாக்கியுள்ளனர்.

அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத பர்வேசின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த ஆசிட்டை குல் பைசாவின் வாயில் ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர்.

ஆசிட் குடித்ததில் படுகாயமடைந்த குல் பைசா அலறி துடித்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மொராதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல் பைசாவுக்கு கடந்த 17 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் ரிதன்யாவின் தற்கொலை ரணமே இன்னும் தீராத நிலையில், அதன் பின்னர் தமிழகத்தில் மட்டுமே 10க்கும் மேற்பட்ட வரதட்சணைத் தொடர்பான தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.

நேற்று முன் தினம், ஒரு வயது குழந்தையை விட்டு விட்டு, பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் வரதட்சணைக் காரணமாக தற்கொலைச் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.