
தனது மூன்று குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவை அலற செய்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் எர்ரகொண்ட பாளையம் மண்டலம் பெத்தபொயபள்ளியில் வசித்து வருபவர் புத்தா வெங்கடேஸ்வர். இவரது மனைவி தீபிகா.
இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் 2 மகள்கள், 4 வயதில் ஒரு மகன். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த புத்தா வெங்கடேஸ்வர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்தால் குழந்தைகள் சிரமப்படுவார்கள் என நினைத்தார்.
மாலையில் பள்ளி முடிந்து வந்த 3 குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் புத்தா வெங்கடேஸ்வர், தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை மண்டலம் ஹாஜிபூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து 3 குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 3 பேரும் தீயில்கருகி உயிரிழந்தனர்.
பின்னர் புத்தா வெங்கடேஸ்வர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனும், குழந்தைகளும் வீடு திரும்பாததை அறிந்த தீபிகா பல இடங்களில் தேடிப் பார்த்தார்.
அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 3 குழந்தைகளையும் கொலை செய்து அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. 3 குழந்தைகள், கணவரின் உடல்களை பார்த்து தீபிகா மற்றும் உறவினர்கள் கதறிஅழுதது காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது.





