பிரபல வங்கியில் நடந்த பாரிய மோசடி அம்பலம்!!

622

 

இலங்கையில் பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கிக்கு சொந்தமான 50 மில்லியன் ரூபாய் மோசடியாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார். இந்த மோசடித் திட்டம் நாட்டிற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு இந்த மோசடியைப் பற்றிய தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மேலும், மோசடியுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.