சினிமாவை மிஞ்சிய சம்பவம் : காருக்குள் காதலிக்கு தாலி கட்டிய இளைஞன்!!

538

நாமக்கல் மாவட்டத்தில், நடிகர் விமல் நடித்த ‘களவாணி’ படத்தை மிஞ்சும் வகையில் சேசிங்க் நடந்த நிலையில், தனது காதலிக்கு காருக்குள் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார் என்ஜினீயர் ஒருவர்.

தனது கண் முன்னே மகளுக்கு காருக்குள் வைத்து காதலன் தாலிக் கட்டியதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அஜய் (26).

இவருடைய உறவினரான நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தண்டபாணியின் மகளும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவியுமான நந்தினியும் (21) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதலனைத் திருமணம் செய்துக் கொள்வதில் நந்தினி உறுதியுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டனர். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நந்தினி. நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்தில் நாமக்கல் வந்து இறங்கியுள்ளார்.

அங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி, நாமக்கல் சேலம் சாலை சந்திப்பில் காதலன் அஜய் மற்றும் அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் காரில் காத்திருந்த நிலையில், அவர்களின் காரில் நந்தினி ஏறி உள்ளார்‌‌.

இதனிடையே கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் வந்த மகளை அழைத்து செல்ல அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி தனது கண் எதிரிலேயே மகள் காதலனுடன் காரில் ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

மகள் காதலனுடன் காரில் ஏறுவதைக் கண்டு, அஜய் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உறவினர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டார்.

அப்போது காருக்குள் சென்ற அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே மோதிரமும் மாற்றி கொண்டனர்.

காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் காரில் இருந்த அஜய் உள்ளிட்டோரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு, அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரை மீட்டு நாமக்கல் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜய்யை காதலித்து வந்த நிலையில், தான் சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.