இத்தாலி செல்ல முயன்ற இரு சிறுவர்களுக்கு பிணை!!

267

Court

ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட யாழ். சிறுவர்கள் இருவரையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலி செல்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் இரு சிறுவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட இவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த போது புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறும், இரு சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இரு சிறுவர்களினதும் பெற்றோர்கள் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது இரு சிறுவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பூர்ணிமா பரனகமகே உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோதி ஜெசந்தா என்ற பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.