
பெங்களூருவில் நடுரோட்டில் மகள் கண் எதிரிலேயே மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித்சவா.
இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், ரேகா கால் சென்ட்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ரேகாவின் சிபாரிசின் பேரில் அதே அலுவலகத்தில் லோஹித்சவாவிற்கு கார் டிரைவர் வேலை கிடைத்தது.
ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரேகா தனது மூத்த மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,

அங்கு சென்ற லோஹித்சவா, ரேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாகுவாதம் முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேகா மீது சரமாரியாக மகள் கண் எதிரிலேயே 11 முறை ஆவேசமாக குத்தியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.
ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து விழுந்த ரேகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ரேகா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான லோஹித்சவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ரேகாவின் மகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெருங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





