
விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழிவு விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகள் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்ட வேளை கைபேசியை வீட்டுக்கே அனுப்புவதாக கூறி முற்பணம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் பலர் அவரது கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்பு செய்துள்ளனர். பணத்தை வழங்கியவர்கள் அதன்பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனைப் பொலிஸார் ஊடாக குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





