மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்!!

449

மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும், இயந்திரத்தையும் திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இந்தநிலையில், குறித்த நபர் நேற்று முன்தினம் (13.10) இந்தியா- தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று (14.10) குறித்த நபர் பயணித்த படகு தமிழ்நாடு மண்டபம் மரைக்கார் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதாகவும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் மேலதிகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் இரண்டு தொழிலாளர்களின் படகு மற்றும் இயந்திரத்தை திருடி சென்றதால் இரண்டு குடும்பத்தினர் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.