வெளிநாடொன்றில் 250 கிராம் 24 கரட் தங்கக் கட்டியை வென்ற இலங்கையர்!!

531

ரியாத்தில் வசிக்கும் 63 வயதான இலங்கை வங்கியாளரான மொஹமட் நளீம் என்பவர் பிரபலமான பிக் டிக்கெட் அபுதாபி வாராந்த இலத்திரனியல் குலுக்கலில் 250 கிராம் 24 கரட் தங்கக் கட்டியை வென்றுள்ளார்.

சுமார் இருபது ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வசித்து வரும் இவர், பல வருட விடாமுயற்சிக்குப் பிறகு, 173160 என்ற இலக்கத்தைக் கொண்ட டிக்கெட் மூலம் தனது கனவை நனவாக்கிக் கொண்டார்.

ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி வங்கியில் பணிபுரியும் நளீம், ஒரு பாகிஸ்தானிய சக ஊழியர் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிக் டிக்கெட் குலுக்கலைப் பற்றி அறிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டுகளை வாங்கி வந்த அவர், இடையில் வாங்குவதை நிறுத்தினார். பின்னர், யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களைப் பார்த்த பிறகு, தனிப்பட்ட முறையில் மீண்டும் முயற்சிக்கத் தொடங்கியதாக அவர் கூறினார்.

வெற்றி அழைப்பு வந்தபோது முதலில் தான் நம்பவில்லை என்று தெரிவித்த அவர்,ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது பெயர் அழைக்கப்பட்டது அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்ததாகக் கூறினார்.

தாம், “ஒரு நாள் நான் வெற்றி பெறுவேன் என்று தனது மனதின் ஆழத்தில் எப்போதும் நம்பியதாக” அவர் கூறியுள்ளார்.

தான் வென்ற 24 கரட் தங்கக் கட்டியை இலங்கையில் உள்ள தனது மனைவிக்கு பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதை தனது மகளுக்காக நகைகளாக மாற்றவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி தனக்கு மட்டுமல்ல, தனது முழு குடும்பத்திற்கும் ஒரு வரம் என்றும் அவர் கூறியுள்ளார்.