
விடிஞ்சா கல்யாணம் சொந்த பந்தம், உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்து, அவர்களும் மண்டபத்தில் திரண்டிருந்த நிலையில், புதுமணப்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சித்தூரை சேர்ந்த பாண்டுரங்கன் – வனிதா தம்பதியின் மகள் சந்தியா (21), பி.காம். படிப்பு முடித்தவர். இவர்கள் தற்போது திருவள்ளூர் அருகே மணவாளநகரில் வசித்து வந்தனர்.
சந்தியாவின் திருமணம், பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த மணி என்ற இளைஞருடன் பெரியோர்கள் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) பலிஜகண்டிகை கிராமத்தில் நடைபெறவிருந்தது. இதற்காக மணமகள் குடும்பம் இரண்டு நாட்களுக்கு முன் மணமகன் வீட்டிற்கு வந்திருந்தனர்.
நேற்று காலை சந்தியா குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆன பின்னும் அவர் வெளியே வராததால், உறவினர்கள் கவலைப்பட்டனர். பலமுறை சத்தம் போட்டும் பதில் வராத நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது, சந்தியா மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.
உடனடியாக அவரை அத்திமாஞ்சேரி பேட்டை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் மரணம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பொதட்டூர்பேட்டை போலீசார் மர்மச்சாவாக வழக்குப் பதிவு செய்து,
சந்தியா விஷம் குடித்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் துயர அலைவையும் ஏற்படுத்தியுள்ளது.





