காதலனுடன் இரண்டு நாட்களில் திருமணம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

395

உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் – மாரியம்மாள் தம்பதியரின் இளைய மகள் நிர்மலா (23) கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரின் காதல் தொடர்பை இரு குடும்பத்தாரும் ஏற்று, இன்று எல்லப்பாளையம் ஸ்ரீ வீரனார் கோவிலில் திருமணம் நடைபெறவும், ஜம்பை பகுதியில் வரவேற்பு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முன் தினம் திருமண வேலைகளுக்காக நிர்மலாவின் பெற்றோர் அந்தியூருக்கு சென்றனர். மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, நிர்மலா அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சித்தோடு போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

மேலும், நிர்மலா தன்னுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை என எழுதிய கடிதம் ஒன்றை வீட்டில் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நடந்த இந்த துயரச்சம்பவம் குடும்பத்தாரும் உறவினர்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ வைத்துள்ளது. சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.