
தனது பெயருக்கும் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் கருத்து தெரிவித்த நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அவரிடம் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளேன்.
எனது அரசியல் நடவடிக்கையை ஆதாள பாதாளத்திற்குள் கொண்டு செல்கின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் இதற்கு ஆதாரத்துடன் பதில் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளேன்.
அவரது குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.அந்த வகையில் என் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
மேலும் இதுவரை இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களில் எனக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் அல்லது விசாரணைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் மன உளைச்சலையும்,கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை அவர் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
-தமிழ்வின்-





