வவுனியாவில் பயிர் நிலங்களை சேதப்படுத்தும் வனவளத்திணைக்களம் : மக்கள் கவலை!!

585

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அம்மக்கள் கருத்து தெரிவித்த போது….

நாங்கள் பூர்விகமாக குறித்த காணிகளில் பயிர்செய்து வந்தநிலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட போரினால் இடம்பெயர்ந்திருந்தோம். மீண்டும் 2012 ம் ஆண்டு மீள் குடியமர்த்தப்பட்டதுடன் எமது காணிகளில் நெற்பயிர்செய்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம்.

தற்போது 13ஆண்டுகளின் பின் வனவள பிரிவு உத்தியோகத்தர்கள் எமது காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு விதைக்கப்பட்டுள்ள பயிர்களை அழித்து தேக்குமரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது உழவு இயந்திரங்களை விவசாய பயிர்களுக்கு மேலாக ஓட்டிச்சென்று பயிர்களை சேதபடுத்தி வருகின்றனர். இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பதிவுசெய்ததற்கான ஆவணமும் எங்களிடம் இருக்கிறது.

எனவே வனவளத்திணைக்களத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி எமது பூர்விக காணிகளை மீளவும் பெற்றுத்தருமாறு நாம் அரசிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட செயலாளருக்கு அவர்களால் மகஜர் ஒன்றும் இன்று கையளிக்கப் பட்டிருந்தது.