இலங்கைக்கு தெற்காக உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

833

இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் 25 முதல் 29 வரை நிலவவுள்ள இந்த மோசமான வானிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.