வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் வெள்ளத்தில் சிக்கி பலி!!

464

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் (01.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இருதினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார்.

பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காலணாளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.