பேரிடரின் போது கிராமம் ஒன்றில் பலரின் உயிர்களை காப்பாற்றிய நாய்!!

31

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பலர் உயிரிழந்த நிலையில், நாயொன்றினால் கிராமம் ஒன்று காப்பாற்றப்ட சம்பவம் பதிவாகி உள்ளது.

பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட சூட்டி என்ற பெயர் கொண்ட நாய் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தமையினால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

கடந்த 28ஆம் திகதி பாரிய மழை பெய்து கொண்டிருந்த போது, குறித்த நாய் தொடர்ச்சி ஊளையிட்டு, உரிமையாளரை எச்சரித்துள்ளது.

நாயின் செயற்பாட்டினை உணர்ந்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்த்த போது, மோசமான நிலைமை குறித்து அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

உடனடியாக குழந்தைகள் உட்பட அந்தப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். காலையில் அவர்கள் வாழ்ந்த இடத்தில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் உவபரணகமவின் மஸ்பன்ன எனப்படும் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி டி.எம். தென்னகோன், தான் அனுபவித்த அனுபவத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.

“செப்டம்பர் மாதம் முதல் எங்கள் கிராமங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 27 ஆம் திகதி மதியம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. மாலையில், எங்கள் கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

பின்னர், கிராமத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அறிந்தேன். இரவில் மிகவும் சிரமப்பட்டு நாங்கள் இரவு உணவு சமைத்து, சமையலறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம்.

எங்கள் நாய் சமையலறைக் கதவை முன் பாதங்களில் மோதி, விசித்திரமாக சிணுங்கி, ஊளையிட்டுக் கொண்டிருந்தது. முதலில், மழையில் திருடன் வந்திருப்பார் என்று நினைத்தோம்.

பின்னர் மழையால் ஏற்பட்ட குளிரால் வீட்டிற்குள் வர முயற்சித்திருக்கலாம் என நினைத்தோம். கதவைத் திறந்தபோது, ​​எங்கள் நாய் குரைத்துக் கொண்டே முன்னோக்கி ஓடுவதைக் கண்டோம்.

அதே நேரத்தில், மலையிலிருந்து பெரிய பாறைகள் உருண்டு விழும் சத்தம் கேட்டது. ஒரு நிலச்சரிவு எங்கள் வீட்டை மூடும் என்று நினைத்தேன். காப்பாற்ற வாருங்கள் என கத்திக்கொண்டு வீட்டிற்குள் ஓடினேன்.

என் மனைவி மற்றும் மனைவியின் தாயையும் அழைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். நிலச்சரிவு வரும் என்று நினைத்து சுமார் 100-200 மீட்டர் ஓடினோம்.

எங்கள் அலறல் பக்கத்து வீடுகளில் வசிக்கும் 11 பேரின் உயிரைக் காப்பாற்றியது. எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. சூட்டியால், நாங்கள் 14 பேரும் காப்பாற்றப்பட்டோம். இல்லையெனில் நாங்கள் மண்ணில் புதைந்திருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.