
பிரித்தானியாவில் இந்திய மாணவி ஒருவரை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்திய லேபர் கட்சி அரசியல்வாதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் மேற்கு வண்டனில் உள்ள லேபர் கட்சி கவுன்சிலர் ஹினா மீர் (Hina Mir), இந்திய மாணவி ஒருவரை குழந்தை பாதுகாவலராக (Nanny) வேலைக்கு அமர்த்தியதற்காக 40,000 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹினா மீர், 22 வயதான ஹிமான்ஷி காங்க்லேயை (Himanshi Gongley) மாதம் 1,200 பவுண்டு பணமாக வழங்கி, தன் இரு குழந்தைகளை கவனிக்க பணிக்கு அமர்த்தியுள்ளார்.
மாணவிக்கு சட்டப்படி வேலை செய்ய உரிமை இல்லை என்பதையும், விசா 2023 மார்ச் மாதத்தில் காலாவதியானதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மாணவி, 2024 ஓகஸ்டில் பொலிஸ் காரை நிறுத்தி உதவி கேட்டபோது, தன்னை உடல்ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஸ்டீபன் ஹெல்மன், “மீர் சமூகத்தில் நல்ல பெயர் பெற்றவர். ஆனால், அவரது சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளதால் நம்ப முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மீர், மாணவியை “வீடியோ கேம்ஸ் விளையாட, டிவி பார்க்க, வீட்டில் சும்மா இருக்க வந்த விருந்தினர்(social visitor)” என விளக்கமளித்திருந்தார்.
ஆனால், நீதிமன்றம் மாணவியின் சாட்சியங்களை உண்மையானவை எனக் கருதி, மீர் மீது அபராதம் விதித்தது. ஹினா மீர், ஹவுன்ஸ்லோ பகுதியில் முன்னாள் துணை மேயர் ஆவார்.
உள்ளூர் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள், “இது சட்டத்தின் மிகப்பெரிய மீறல். அவர் கவுன்சிலர் பதவியில் தொடரக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.
மீர், 40,000 பவுண்டு அபராதத்துடன் 3,620 பவுண்டு நீதிமன்ற செலவையும் கட்ட வேண்டும். இந்த சம்பவம், பிரித்தானியாவின் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான கடுமையான நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.





