பயணிகளை காப்பாற்ற உயிரை விட்ட நாய் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

742

Dog

சென்னையில் தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு இருப்பதை கண்டுபிடித்து இளைஞர் ஒருவரை காப்பாற்ற முயன்ற நாய், மின்கசிவு பாய்ந்த நீரில் குதித்து உயிரை இழந்துள்ளது.

சென்னையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அல்லிகுளம் வளாகம் வழியாகச் செல்லும் நுழைவாயில் அருகில் தேங்கியிருந்த தண்ணீரில் வீதி விளக்கு கம்பத்தில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு மழைநீரில் பாய்ந்துள்ளது.

இது தெரியாமல் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், மழைநீரில் கால் வைக்க வந்த பயணிகளை அங்கிருந்த நாய் ஒன்று விரட்டியுள்ளது.

இதனை பார்த்த பயணிகள் பயந்துபோய், மழைநீர் இருந்த பக்கம் வராமல் சுற்றியபடி சென்றுள்ளனர். பயணிகளில் சிலர் பயத்தில் நாய் மீது கல் எறிந்துள்ளனர்.

அந்த நாய் எப்போதும் அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை நிலைய வளாகத்தில்தான் தங்கியிருக்கும். அது 2 நாட்களுக்கு முன்பு 7 குட்டிகளை போட்டிருந்தது. குட்டிகள் இன்னும் நடமாட ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில், அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர், நாய் குரைப்பதையும், தன்னை விரட்ட முயல்வதையும் கண்டு கொள்ளாமல், மழைநீர் தேங்கிய பகுதிக்கு அருகே சென்றுள்ளார்.

அப்போது அந்த இளைஞரை நோக்கி தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்த நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு, அவரை நோக்கி வேகமாக ஓடிவர ஆரம்பித்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், பின்வாங்கியபோது, அந்த நாய் வேகமாக பாய்ந்து வந்து மின்கசிவு ஏற்பட்டிருந்த மழைநீரில் பாய்ந்துள்ளது.

அதில் இருந்த மின்சாரத்தால் நாய் துடிதுடித்து உயிரை விட்ட காட்சியைப் பார்த்த இளைஞர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து அந்த இடத்தை சரி செய்துள்ளனர்.

பின்னர் மழைநீரில் இறந்து கிடந்த நாயை மீட்டு, நடைமேடையில் கிடத்திய பின், பயணிகளை காப்பாற்றிய நாய்க்கு மாலை வாங்கிப்போட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.