வவுனியாவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.50 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!!

162

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர் நெற்செய்கையானது அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கையானது 62846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது.

இதேவேளை மாவட்டத்தின் வருட மழைவீழ்ச்சியில் 68 வீதமான மழை வீழ்ச்சியானது குறித்த நான்கு நாட்களில் பெறப்பட்டமையால் ஏற்பட்ட வரலாறு கானாத வெள்ளம் காரணமாக அனைத்து குளங்களும் வான் பாய்ந்திருந்தமையாலும் 124 குளங்கள் உடைப்பெடுத்திருந்தமையாலும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ள அனர்த்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஒரு ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்வதற்கு நிலத்தினை பன்படுத்ததுவதற்கு, விதைநெல் மற்றும் பசளை, கிருமிநாசிகள் உட்பட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வரை செலவாகும் நிலையிலே வங்கிக் கடனை பெற்றும் தங்களது நகைகளை அடகு வைத்தும் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதேவேளை அரசினால் வயல் அழிவிற்காக ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பணத்தினை விரைந்து வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.