தங்கத்தின் அதிரடி விலையேற்றம் – புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை!!

466

கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (24.12.2025) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று 354,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்று (23) இதன் விலை 352,000 ரூபாவாகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 2,000 ரூபாவினால் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியை பதிவு செய்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவில் நிலவும் போர் பதற்றங்கள் உலக சந்தையில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கக்கூடும் என்ற தகவல்கள் தங்கத்தின் மதிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு உலக நாடுகள் பலவற்றிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்பாட் கோல்ட் XAU ஒரு அவுன்ஸ் 4,391.92 டொலர் ஆக 1.2வீதம் உயர்ந்து 4,391.92 டொலராக நேற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.