சிறுநீரகத்தால் இணைந்த இதயங்கள் : நெஞ்சை உருக்கும் காதல் கதை!!

366

kidney_love

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞருக்கு பெண் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானம் செய்ததோடு அவரை காதல் திருமணமும் புரிந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்த ரமீஷ் என்ற இளைஞருக்கு அவரது தாயாருக்கு வந்ததைபோலவே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரமீஷின் நண்பர் சதீஷ் என்பவரின் தங்கை சபிதா மருத்துவமனையில் ரமீஷை பார்த்துகொள்ள சென்றுள்ளார்.

அன்று ரமீஷிற்கு கண்களை பரிசோதிக்க அழைத்து சென்றபோது கண்களுக்கு மருந்து ஊற்றப்பட்டதால் சபிதாவின் கையை பிடித்துக்கொண்டு நடந்துள்ளார்.

பின்னர் கிளம்பும்போது ரமீஷிடம் தனது கைப்பேசி எண்ணை கொடுத்து சென்றதால், அவ்வப்போது இருவரும் குறுஞ்செய்தி மூலமும் பின்னர் போன் பேசியும் வந்துள்ளனர்.

மரண பயத்தோடு இருந்த ரமீஷிற்கு சபிதா நம்பிக்கையூட்டும் வகையில் ஆறுதல் அளித்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் இடையில் நல்ல புரிதலும் காதலும் மலரத் தொடங்கியுள்ளது.

இதை அறிந்துகொண்ட இருவீட்டாரும், அவன் எந்த நிமிடத்திலும் இறந்து போகக்கூடியவன். உன் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளாதே என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதனை பொருட்டாக எடுத்துகொள்ளாத சபிதா அவரை தீவிரமாக காதலித்துள்ளார். பின்னர் ஒருநாள் சபிதா இனி நான் திரும்பி வரமாட்டேன் என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றுள்ளார்.

ரமீஷை தொடர்புகொண்டு என்னை தங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். உடலும் சரியில்லாமல், மனதும் சரியில்லாத நேரத்தில் கையில் இருந்த வெறும் 50 ரூபாயுடன் ரமீஷ் செய்வதறியாது இருந்துள்ளார். ஆனால் இறுதியில் அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

கோவிலுக்கு சென்று மாலைமாற்றிவிட்டு, பதிவு அலுவலகத்தில் போய் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர்.

பின்னர் ரமீஷின் மருத்துவ பரிசோதனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி ஆனால் அதையும் உடனே செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சபிதா தனது சிறுநீரகத்தை வழங்க முன்வந்தபோதும், அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் செய்வதறியாது திகைத்துள்ளார்.

அந்த நேரத்தில் ராஜேஷ் என்ற மருத்துவர் கருணையோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நோயாளிகளின் உறவினர்களிடமும், மருத்துவர்கள் சிலரும் சிறிதளவு பண உதவி செய்ய வெற்றிகரமாக சிகிச்சை முடிந்துள்ளது.

மேலும், அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து தற்போது இந்த தம்பதி கோழிக்கோட்டில் உள்ள ஒரு பார்மசியில் வேலைபார்த்து வருகின்றனர்.