
புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள நைனமடம பாலத்தில் உள்ள ஜின் ஓயாவில் குதித்து பதின்ம வயது யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன யுவதி பொருத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போன யுவதி காதல் உறவில் இருந்த இளைஞனை சம்பவ இடத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
பின்னர், அவரது காதலன் மற்றொரு நண்பருடன் நைனமடம பாலத்திற்கு அருகில் வந்தபோது, அந்த யுவதி ஜின் ஓயாவில் குதித்ததாகவும், அவரைக் காப்பாற்ற அந்த இளைஞனும் ஜின் ஓயாவில் குதித்ததாகவும், தெரியவந்துள்ளது.
எனினும் அந்த இளைஞனை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். யுவதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





