
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ, நைனமட பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்த யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனையை சிலாபம் பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி டி.கே. விஜேவர்தன மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட பிற காரணங்களால் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி வென்னப்புவ, ஜின் ஓயா பாலத்திற்கு வந்த யுவதியொருவர் தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய பின்னர் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்திருந்தார்.

கொச்சிக்கடை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயதுடைய உமயங்கனா சத்சரணி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
அதே நேரத்தில், குறித்த யுவதியின் காதலன் என அறியப்படும் இளைஞன் அவரை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்த நிலையில், அயலவர்களின் உதவியுடன் இளைஞன் மீட்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், யுவதி காணாமல்போயிருந்த நிலையில், மறுநாள் (29 ஆம் திகதி) பாலத்தின் அருகே மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதன்போது காப்பாற்றப்பட்ட இளைஞன் 1990 ஆம்புலன்ஸ் மூலம் மாரவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் யுவதியின் மரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





