விளையாட்டாக கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி : கந்தளாயில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

516

கந்தளாய் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில், விளையாட்டாக கழுத்தில் கத்தி வைக்கப்பட்டதில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (04.01.2026) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து சூரியபுர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆறு இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து கந்தளாய் பேருந்து நிலையத்திற்கு மேலுள்ள சிகையலங்கார நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஒருவருக்கு முடி வெட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சிகையலங்காரக் கருவிகளைக் கொண்டு ஏனைய இருவர் விளையாடியுள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக 15 வயதுடைய அசேன் சாருக்க சூரியதாச என்ற சிறுவனின் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், கழுத்தில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.