
விவாகரத்தான இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், குழந்தையைப் பிரிந்து வர மறுத்த காதலியை நடுரோட்டில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, காதலன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் எல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (30). இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளியில் சத்துணவு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்த காலகட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவருடன் ரஞ்சிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. ரஃபிக் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். குழந்தையை விட்டு வரச் சொன்னதால் ரஞ்சிதா காதலை முற்றிலும் மறுத்து பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரஃபிக், கடந்த ஜனவரி 2ம் தேதி வேலை முடிந்து வந்த ரஞ்சிதாவை வழிமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறு வலுக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதாவின் கழுத்தை அறுத்தார்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் ரஞ்சிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான ரஃபிக், காட்டில் தூக்கிட்ட சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த இரட்டை மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





