
தட்சிண கன்னடா (கர்நாடகா) மாவட்டம், கொடியால கிராமத்தைச் சேர்ந்த மதுஸ்ரீ (34) மற்றும் அவரது 3 வயது மகள் தன்வி ஆகிய இருவரின் சடலங்கள்,
அருகில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனது கணவர் ஹரீஷ் மற்றும் குழந்தையுடன் மதுஸ்ரீ என்கிற இளம்பெண் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் உறங்கச் சென்றவர்கள், மறுநாள் காலையில் காணவில்லை.
தாயையும், மகளையும் காணவில்லை என்று உறவினர்கள் அக்கம்பக்கம் இவர்கள் இருவரையும் தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகே உள்ள ஏரியில் இருவரும் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டபோது அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.
மதுஸ்ரீ தனது 3 வயது மகள் தன்வியை, ஒரு துணியால் தன்னோடு உடலில் சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்துள்ளார். சடலங்கள் மீட்கப்பட்டபோது, அந்தச் சிறுமி தனது தாயை அணைத்த நிலையிலேயே உயிரிழந்திருந்தது கண்கலங்க செய்தது.
குடும்பத் தகராறு அல்லது மன உளைச்சல் காரணமாக மதுஸ்ரீ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதே சமயம் மதுஸ்ரீயின் தாய் ரத்னாவதி,
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்துள்ளார். இதனால் இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதி நடந்ததா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மைத் தெரிவரும் எனப் பெல்லாரே போலீசார் தெரிவித்துள்ளனர்.





