
இலங்கையில் “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சில இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை இன்று (17.01.2026) அதிகாலை வேளையில் மக்கள் கண்டு கழித்துள்ளனர்.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருட ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்திருப்பதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந்தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் மற்றும் நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





